Sunday, April 4, 2010

மனிதம் கற்போம் பூனையிடம்

அன்று ஒரு விடுப்பு நாளின் காலைப்பொழுது. நான் வீட்டின் பின்புறம் அமர்ந்து இருந்தேன்.என் முன்னே பூனை ஒன்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாய் இருந்த அதற்கு என் வீட்டார் உணவு அளித்துக் கொண்டிருந்தார்கள். அன்று முழுவதும் அதனை நான் கவனித்துக் கொண்டிருந்தேன் .பூனை என்றால் அத்தனைப் பிரியமில்லாத என் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் அதற்கு ராஜ உபசாரம் செய்து கொண்டிருந்தார்கள்.


எனக்கோ ஆச்சரியம், நேரே என் அம்மாவிடம் சென்று என் ஆச்சரியத்தை தெரிவித்தேன்.அம்மா எனக்கு சொன்ன பதிலில் என் ஆச்சரியம் பல மடங்கு கூடியது கூடவே சில வினாக்களும் தொற்றிக்கொண்டன. வினாக்கள் பதிவின் இறுதியில்...


எனக்குத் தொற்றிக் கொண்ட ஆச்சரியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

எங்கள் வீட்டின் அருகில் ஓலை வேய்ந்த குடிலில் வசித்துக் கொண்டிருந்த அந்த ஏழைப் பெண்ணுக்கு இரு குழந்தைகள். அவர்களுடன் எங்கிருந்தோ வந்து சேர்ந்த அந்தப் பூனைதான் குழந்தைகள் இருவருக்கு விளையாட்டுத் தோழன். குழந்தைகளுடன் விளயாடிய நேரம் போக வீட்டைச் சுற்றி அலைந்து கொண்டு சிறு பூச்சிகளை பிடித்துத் தன் பசியைப் போக்கிக் கொள்ளும் இந்தப் பூனை.
கிராமங்களில் நீங்கள் கவனித்திருக்கலாம், பூனை நாய் போன்ற பிராணிகள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே வளைய வருவதை.இந்த பூனை அக்கம் பக்கம் வீட்டில் எல்லாம் போய் விளையாடும் . காடு மேடு எதுவும் பார்க்காமல் தாவிக் குதித்து ஓடிக் கொண்டே இருக்கும்.
அந்தப் பெண்ணின் வீட்டின் அருகிலேயே ஒரு பொட்டல் கிணறு,பலகாலம் பயன்படுத்தாமல் நீர் வற்றிப் போய் பாழடைந்து கிடந்தது. சலங்கை ஒலி கமல் போல தன்னை நினைத்திருந்த இந்தப் பூனையோ தினமும் அந்தக் கிணற்றின் மேலேறி நடனமாடும். பூனையின் ஒரு போறாத நாளில் கிணற்றின் மேலிருந்து தவறி உள்ளே விழுந்து விட்டது. முப்பது நாற்பது விட்டது அடி ஆழமான அந்தக் கிணற்றிலிருந்து அதனால் மேலேற முடியவில்லை.
திடீரென பூனையை எங்கும் காணாது தேடிய அந்தப் பெண், ஒரு நாள் கழிந்து தற்செயலாக கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க ,உள்ளே பூனையைக் கண்டாள். கிணற்றில் நீர் சேந்தும் வாளியை கயிற்றில் கட்டிப் பூனையை வெளியே எடுக்க பலபாடு பட்டாள். வாளியில் ஏறினாலும் கயிற்றின் ஆட்டத்தில் பயந்து எல்லா முறையும் வாளியிலிருந்து கிணற்றுக்குள் குதித்து விட்டது பூனை.
நீர் இல்லாத கிணறாதலால் அடியும் பட்டிருந்தது பூனைக்கு. பூனையை வெளியே எடுக்க முடியாது என்ன செய்வது என தவித்த அந்தப் பெண், தினமும் தன்னால் முடிந்த ஏதாவது உணவுப் பொருளை கிணற்றுக்குள் எறிந்து கொண்டே இருந்தாள். இப்படியே மூன்று மாத காலம் ஓடி விட்டது.
ஆனால் ஓடியாடி விளையாட முடியாததால்,மெலிந்து கொண்டே போனது பூனை. அந்தப் பெண்ணும் சலிக்காமல் உணவை எறிந்து கொண்டே இருந்தாள் இடையிடையே வாளியை இறக்கி பூனையை மேலே கொண்டு வர முயன்று கொண்டே இருந்தாள். எல்லா முறையும் தோல்விதான்.வாளியிலிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் ஆடிக் கொண்டிருக்கும் கயிற்றை பாம்பென நினைத்தே பலமுறை பயந்திருக்கிறது அந்தப் பூனை.
இதற்கிடையில் மழை நாள் ஒன்றில் கிணற்றைச் சுற்றி மேய்ந்து கொண்டிருந்த கோழி ஒன்று கிணற்றுக்குள் தவறிப் போய் விழுந்து விட்டது. கிணற்றில் கோழி விழுந்ததைப் பார்த்த சிலர்,மூன்று மாத காலமாக சரியான உணவில்லாமல் கிணற்றுக்குள் இருக்கும் பூனை எப்படியும் கோழியைப் பிடித்துத் தின்று விடுமெனக் கருதி கோழியை மறந்துவிட்டனர்.
இரு தினங்கள் கழிந்து எதேச்சையாக கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த அந்தப் பெண்மணி, கோழி உயிருடன் இருப்பதைப் பார்த்து வியப்பின் உச்சிக்கே போய் விட்டாள்.உயிர் பயம் என்னவென உணர்ந்திருந்த பூனை " கோழி உயிரையும் தம் உயிர் போல்” எண்ணி தனக்கு அளித்த உணவிலிருந்து கோழியை உண்ண அனுமதித்து உயிருடன் விட்டிருந்தது.
பூனையும் நாயும் நண்பர்கள்/ பூனைக்கு பால் கொடுக்கும் நாய், என புகைப்படத்துடன் செய்திகளை நானும் படித்திருக்கிறேன்.ஆனால் ஒரு நல்ல பாதுகாப்பான /உணவுக்கு உத்திரவாதம் உள்ள, மனிதர்களின் கண்காணிப்புடன் கூடிய ஒரு சூழ்நிலையில் இது ஓரளவிற்கு சாத்தியம்தான். ஆனால் தனிமையில், மூன்று மாதகால,மனநிலை பிறழகக்கூடிய ,கட்டுப்பாடற்ற ஒரு சூழ்நிலையில் பூனை இப்படி மனிதத்துடன் நடந்து கொள்வது 1௦௦ %அதிசயம் தான்.
ஒருசில அவசர கணங்களில், ஒரு நேர உணவை நாம் தவற விட நேர்ந்தாலே ஏதாவது கோழியைப் பார்த்தால் அது நமக்கு கோழியாகத் தெரியாது, 'சிக்கன் 65 ' ஆகவோ ‘கிரில் சிக்கனாகவோதான்’ தெரியும். பசியால் மனிதனை மனிதனே அடித்துப் புசித்த கதைகளைப் படித்திருந்த எனக்கு அந்தப் பூனையின் மன நிலை, ஒரு முற்றும் துறந்த முனிவனின் மனநிலையோடும், வள்ளலாரின் ஒப்பற்ற காருணியத்தோடும் ஒப்பிடத் தோன்றியது .மனிதன் மறந்த மனிதத்தின் உயர் நிலை அது.
அடுத்த இரு நாட்களில் மீண்டும் ஒருமுறை வாளியை இறக்கியதில் கோழி அதி லேறி மேலே வந்து விட்டது. ஆனால் பூனை பயந்து கொண்டே இருந்தது.
பூனை கிணற்றில் விழுந்து ஆறு மாதம் ஆனபிறகு ஒரு நாள் திடீரென அந்தப் பெண்ணுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி ஒரு கருவாட் டைத் தீயில் இட்டு நன்றாகச் சுட்டு வாளியினுள் வைத்து கிணற்றுக்குள் அனுப்பினாள். கருவாட்டின் வாசனையால், வாளிக்குள் தாவிய பூனை உடனே அதை சாப்பிடத் துவங்கியது.. பூனை உணவில் கருத்தாக இருந்த நேரத்தில் வாளியை கிணற்றில் இருந்து மேலே ஏற்றிவிட்டாள்.ஆறு மாத காலத்திற்குப் பிறகான சிறை வாசத்திற்குப் பிறகு மண்ணைத் தொட்டது பூனை.
பதிவின் முதலில் குறிப்பிட்டிருந்த வினாக்கள் இங்கே,

1. மனிதத்தை இந்தப் பூனையிடம் இருந்து கற்றுக் கொள்ள நாம் தயாரா?
2. நடைமுறை வாழ்வியலில் நம் மனிதம் தேய்த்து விட்டதா ?
3. பிரதிபலன் பாராத அந்த ஏழைப் பெண்ணின் பொறுமை/மனநிலை நமக்கும் வாய்க்குமா ?




Friday, January 1, 2010

மீன்பிடிப் பொழுதுகள்

அமராவதி ஆறு அரவணைத்தபடிச் செல்லும் தாராபுரம்தான் (தாரைஜெய்!! ) நான் என் பள்ளிக்கூட நாட்களை நகர்த்திய ஊர்.( ஈரோடு மாவட்டத்தில் இருந்து தற்போது திருப்பூர் மாவட்டத்தோடு சேர்க்கப்பட்ட அதே தாராபுரம்தான்.)
கோவை போன்ற பெரிய ஊரோடு சேராமலும் சிறிய கிராமத்தோடு சேராமலும் இருந்த தாராபுரத்தில் என்னை மிகவும் கவர்ந்து வைத்திருந்தது, பெரிய கடைவீதிகள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகள் அல்ல , அமராவதி துள்ளி ஓடும் வயலோரங்களும் ,ராஜவாய்க்காலின் கரையோரத் தோட்டங்களும் தான். (சும்மாவா எவ்வளவு இளநி, வெள்ளரிக்காய்,கரும்பு ஆட்டயப் போட்டு இருப்போம் ).ஒன்றாவது துவங்கி ஐந்தாம் வகுப்பு வரையிலான நண்பர்கள் அல்லாது ஆறாம் வகுப்பில் எனக்கு கிடைத்த நண்பர்களில் பெரும்பாலானோர் இப்பகுதியை சார்ந் தவர்களாக இருந்தது இன்னோர் காரணமாக இருக்கலாம்.
தாராபுரம் போன்ற ஊரில் எங்களுக்குக் கிடைக்கும் பரிட்சை விடுமுறை மற்றும் நீண்ட விடுமுறைகளைக் கழிக்க ஸ்நூக்கர் கிளப்களோ,மல்டிபிளக்ஸ்களோ கிடையாது . காலை நேரம் விளையாடும் பூப்பந்து மற்றும் எப்பொழுதாவது விளையாடும் கிரிக்கெட் தவிர எங்கள் பொழுது போக்கிற்காக நாங்கள் ஐவர் உருவாக்கிய நிகழ்வுதான் மீன்பிடிப் பொழுதுகள்.நான்,கணேசன்,செல்வன்,ஆறுமுகம் மற்றும் சதீஷ்தான் இந்த ஐவர் கூட்டணி. (நாங்க அஞ்சு பேர் எங்களுக்கு மீன் புடிக்க பயமே கிடையாது !!) சில சமயம் உலகநாதன் எனும் வேறொரு நண்பனும் எங்களுடன் வருவான். மீன்பிடிப் பொழுதுகள் என்றால் வெறுமனே மீன் பிடிப்பது மட்டுமல்ல, பிடித்த மீனை ஆற்றங்கரையோரமாகவே சமைப்பது, மீன் பிடிப்பதற்கு நிறைய சமயம் பிடிக்குமென்பதால் அதற்கு நடுவே நாட்டுக்கோழி குழம்புடன் சோறு சமைப்பது என பல நிகழ்வுகளின் ஒருங்கிணைவு அது !!
எங்கள் மீன்பிடிப் பொழுதுகள் விடுமுறை நாள் காலை 9 மணியளவில் துவங்கும்.இரு தினங்களுக்கு முன்பாகவே பல ப்ளான்களைப் போடுவோம். யார் யார் வீட்டில் இருந்து என்ன ஐட்டங்களை ஆட்டயப் போடறதுங்கறதுல துவங்கி (வீட்டார் அசந்த சமயம் எண்ணெய், அரிசி,தக்காளி,வெங்காயம் போன்றவற்றை பதுக்கி வைத்து விடுவோம்.) எந்த இடத்தில் மீன் பிடிக்கப்போவது, ஒவ்வொருவருடைய பணப்பங்கு எவ்வளவு என எல்லோவற்றையும் மென்பொருள் நிறுவனங்களுக்கு நிகரான நேர்த்தியுடன் திட்டமிட்டுவிடுவோம். (திட்டமிடல் மட்டும்தான், ஆனால் அவர்களைப் போலல்லாமல் திட்டமிட்டதை நாங்கள் 100% செயல்படுத்தி விடுவோம்!!.(-No additional resource ,No change management மிக முக்கியமாக No politics)
மீன் பிடிப்பதற்கு பொதுவாக, தூண்டில் போடுவது, வலை போடுவது, கைத்துளாவல், இரவு வேட்டை, ஆற்றோட்டத்தைத் தடுத்து புகையிலை கரைப்பது, (அமராவதி ஆற்றின் மீன் பிடிப்பகுதிகள் பாறைகளுக்கு நடுவே அமைந்திருப்பதால் ஆற்றோட்டத்தைத் தடுப்பது எளிது), மற்றும் வெடி போடுவது என பல வழிமுறைகள் உண்டு.
தூண்டில் போட்டு மீன் பிடிக்க எங்களுக்கு பொறுமை கிடையாது, வலை வீச வலை கிடையாது,இரவு வேட்டைக்கு வீட்டில் பொய் சொல்லி வெளியே வர முடியாது.எனவே எங்கள் வழி ஆற்றோட்டத்தைத் தடுத்து புகையிலை கரைப்பது. தடுக்கப்பட்ட தண்ணீரில் புகையிலை கரைசலை கலந்து விடுவோம்,சிறிது நேரத் திற்கு எல்லாம் மீன்கள் மயங்கி மிதக்கத்துவங்கும். அப்போது அவற்றை லபக்கிக்கொண்டு வந்து விடுவோம்.
சில சமயம் எங்களுடன் வரும் உலகநாதன், ஆறுமுகனோடு சேர்ந்து பாறைகளுக்கு நடுவே கையை விட்டே நிறைய மீன்களை பிடித்து விடுவான் .இடையிடையே மாட்டும் தண்ணீர் பாம்புகளை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததாக எனக்கு நினைவு இல்லை.
கணேசன் வீடு வாய்க்கால் கரையோரமாக இருந்ததால் சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை அவன் வீட்டில் இருந்து கிளப்பிக் கொண்டு வந்து விடுவோம்.எங்களுடைய ப‌ட்ஜெட்டுக்குத் தகுந்தாற் போல் சமையலின் தரம் அமையும். சமையலுக்கு முன் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வருவோம். அடுப்பு தயார் செய்வோம்.மழை வருவது போல் இருந்தால் புதர் ஒதுக்கி தளமமைப்போம். தலைக்குமேல் ஒழுகாமல் இருக்க பனை ஓலை கொண்டு பந்தலும் அமைப்போம். பனை நொங்கு கிடைக்கும் சமயமென்றால் கணேசனை மரத்தின் மேல் ஏற்றி விட்டுவிடுவோம். அடிப்பருத்த பனை என்றால் எங்களில் இருவர் ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறி கணேசனை மரத்தில் ஏற்றி விடுவோம்.

மற்றவர்கள் மீன் பிடிக்கையில் நானும் கணேசனும் சமையல் வேலைகளை ஆரம்பித்து விடுவோம். நாங்கள் இருவரும் மீன் பிடிப்பதில் சூரப்புலிகள்!! என்பதால் இந்த ஏற்பாடு. நாங்கள் சமையலை முடிப்பதற்கும் அவர்கள் மீன் பிடித்து முடிப்பதற்கும் சரியாக இருக்கும். ஆற்றங்கரையோரம் வாழையிலை அறுத்து சமைத்ததை சாப்பிட்டுவிட்டு தண்ணீருக்குள் தாவி விடுவோம். இரண்டு மூன்று மணிநேரம் மிதந்தபிறகு மாலை நான்கு மணியளவில் பிடித்த மீன்களை அடுப்பில் பொரிக்க ஆரம்பித்து விடுவோம். ஐந்து ஆறு மணியளவில் எல்லா மீன்களையும் காலி செய்துவிட்டு வீட்டுக்கு மூட்டை யைக் கட்டிவிடுவோம்.
எல்லாமே ஒழுங்காதான் போய்ட்டு இருந்துச்சு, எங்களுக்கு அந்தப் பேராசை வரும் வரை. அஞ்சு மீனுக்கும் பத்து மீனுக்கும் புகையிலைய கரைக்கறத விட பேசாம வெடி போடலாங்கறதுதான் அந்தப் பேராசை(வெடி போட்டா குறைந்தது பத்து முதல் இருபது கிலோ மீன் கிடைக்கும் நண்பர்கள் மத்தியில் நல்ல விளம்பரம் வேறு). வெடி போடறதுன்னா நல்லா தண்ணி ஆழமா இருக்குறா இடமா பாத்து போடணும்.பொதுவா அந்த மாதிரி இடமெல்லாம் மீன் தொழில்முறையா பிடிக்கறவங்க வருடஉரிமம் வாங்கி பிடிக்கற இடம். இருந்தாலும் தெனாவெட்டா இது நம்ம இடம், எவன் என்ன பண்றான் பாத்துடலாம் அப்டீன்னு வெடி போட பொதுக்குழு கூட்டி முடிவு பண்ணீட்டோம் .மீன் பிடிக்க, மீன் பிடிக்கறவங்க மீன் வியாபாரத்திற்காகச் செல்லும் காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணி வரை சரியான சமயம் என முடிவு செய்தோம்.
(வெடி போடறதுன்னா என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்தப் பத்தி . வெடி போடறதுலயும் பாறாங்கல்,பப்பாளிமரத் தக்கை, மண் எல்லாம் போட்டு ஆற்றோட்டத்தைத் தடுக்க வேண்டும்.தேங்கி இருக்கும் தண்ணீரில் வெடியை பாலீதின் பேப்பரில் தண்ணீர் புகா வண்ணம் நன்றாகக் கல்லுடன் கட்டி தண்ணீரின் ஆழத்துக்கு எறிய வேண்டும்.பாலீதின் பேப்பரின் உள்ளிருந்து நீண்டிருக்கும் திரியைப் பற்ற வைத்த உடன் வெடிக்கும் வெடியின் அதிர்வில், மீன்கள் மயங்கி மிதக்கத் துவங்கும். உடனே நீரில் குதித்து, மீன்கள் நீரின் அடியில் படியத் துவங்கும் முன் அள்ளி வந்து விட வேண்டும். )
எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஒரு சுப முகூர்த்த சுப தினத்தில் வெடி போடக் கிளம்பினோம். இம்முறை சமையல் செய்ய, எல்லாம் பெரிய பெரிய பாத்திரங்களாக எடுத்துக் கொண்டோம் .எல்லாம் எடுத்த நாங்கள் பிடிக்கும் மீனைப் போட்டு வைக்க பாத்திரம் எதுவும் எடுக்க மறந்து விட்டோம் . பத்து முதல் இருபது கிலோ மீன் வரை போடும் அளவிற்குப் பெரிய பாத்திரம் எதுவும் கிடைக்காததால் கணேசனுடைய எச்சரிக்கையையும் மீறி,அவனது வீட்டில் விதை நெல் கட்டி வைத்திருந்த சாக்கு ஒன்றை, நெல்லை தரையில் கவிழ்த்து கொட்டிவிட்டு எடுத்துக் கொண்டோம்.
அடுத்ததா வெடி போடறது. ஆற்றின் ஒருபுறம், அறுவடை முடிந்த சமயமாதலால் ஆளரவமே இல்லை. ஆனால் மறுபுறம் கரையை ஒட்டி சற்றே உட்புறமாக இருந்த செங்கல்சூளையில் வேலை செய்வோர் சிலர் இருந்தனர். ஆனால் ஆளுயரத்துக்கும் மேலாக வளர்ந்திருந்த நாணல் செடிகளின் ஊடே அவர்கள் எங்களைப் பார்ப்பது சற்றே கடினம். எங்கள் திட்டப்படி செல்வன், வெடியை பாலீதின் பேப்பரில் கட்டி திரியை பற்ற வைக்க வேண்டும். நாங்கள் நால்வரும் மூன்று திசைகளையும் கண்காணிக்க வேண்டும். அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்துவிட்டு செல்வன் திரியை பற்ற வைத்தவுடன் நாங்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு ஓடி ஒளிந்து கொண்டோம்.
சிறிது நேரம் எந்த சத்தமுமே இல்லை.திடீரென செல்வன் ,” ஓடுங்கடா, ஓடுங்கடா” னு சத்தம் போடறான். கல்லுடன் கட்டிப் போட்ட வெடி கயிற்றில் இருந்து பிரிந்து மேலே மிதந்ததைப் பார்த்துவிட்டு அவன் செய்த எச்சரிக்கைத்தான் அது. உடனே மேடு, பள்ளம் பார்க்காம மேல கீழ விழுந்து அடிச்சுட்டு ஓடினோம். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பயங்கர சத்தத்தோட வெடி வெடிச்சுடுச்சு. தண்ணீருக்கு மேல் வெடித்ததால் சத்தம் சும்மா காதைப் பொளந்துடுச்சு . தண்ணீருக்கு மேல் வெடித்ததால் மேல பலமா எழுந்த தண்ணியால பக்கத்து தென்னை மரத்து உச்சியில இருந்து தண்ணி சொட்டுது. அவ்வளவு உயரத்துக்கு தண்ணி எழும்பினதைப் பாக்க முடியாம போய்டுச்சேன்னு வருத்தப்பட்ட செல்வனுக்கு கிடைத்தது நல்ல உதை.
சத்தம் கேட்டு அங்க கூடின செங்கல்சூளை மக்கள் எங்களப் பாத்துரக் கூடாதுனு நாங்க ஓடின வேகத்துல எல்லாப் பாத்திரங்களையும் அங்கேயே போட்டுட்டு வந்துட்டோம் .கணேசன் வீட்டுக்குப் போனா அங்க விதை நெல் சிதறிக் கிடக்குது. அப்படி இப்படி ஒரு சாக்கை தாயார் செய்து நெல்லை அதில் கொட்டியபின், எல்லோருமாக கடை வீதிக்குப் போய் ஆளுக்கொரு சிறிய பொறித்த மீன் வாங்கி சாப்பிட்ட பின்தான் சற்றே ஆசுவாசம் அடைந்தோம்.அதன்பின் பல மாதங்களுக்கு அந்தப் பக்கமே நாங்கள் போவதை மறந்துவிட்டோம்.
இப்பொழுதும் எங்கள் ஐவருக்கும் அரிதாக, ஒன்றாக சமயம் கிடைத்தால் மீன்பிடிப் பொழுதுகளை திட்டமிட மறப்பதில்லை. அப்போது கற்றுக்கொண்ட சமையல் இன்று வரை எனக்குக் கை கொடுக்கிறது. பெங்களூரில் Kairali,Kudla மற்றும் Coconut grove போன்ற இடங்களில் சில சமயம் மீன் சாப்பிட நேர்ந்தாலும் இந்த மீன்பிடிப் பொழுதுகள் மீனின் சுவையை இதுவரை நான் உணர்ந்ததில்லை.

Friday, December 25, 2009

ஆம்ஸ்டர்டாம் பயணம் …

வேலைப்பளுவுக்கு மத்தியில் ஏறக்குறைய மறந்தே போன என் புத்தக வாசிப்பை விரிவுபடுத்த, இணையத்தில் எழுத எடுத்து வைக்கும் என் முதல் அடி இது…
வலைத்தள எழுத்துக்களின் மீது என் கவனத்தை திரும்ப வைத்த நண்பர்கள் தியாகு,சில்வர் ,நிவேதா மற்றும் நாகாவின் எழுத்துகளுக்கு என் முதல் நன்றி. முதன் முறையாக ,நான் சென்று வந்த Amsterdam பயணம் பற்றி எழுத நினைக்கிறேன்.
இம்முறை வேலை நிமித்தமாக நான் தங்கி இருந்தது Germany யின் வடக்குப்பகுதியான Bremen. ஆதலால் Netherland மற்றும் Belgium தவிர்த்து வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பது, என் வேலைப்பளுவுக்கு மத்தியில் கடினம்.எனவே Bremenல் இருந்து 275 கிமீ தொலைவே உள்ள Amsterdam சென்று வர முடிவு செய்தேன்.
Amsterdamன் முக்கிய அம்சமான Tulip Garden ஐ குளிர்காலம் ஆதலால் காணமுடியாது என்ற போதிலும், நீண்ட நெடிய வரலாறு உடைய Amsterdamன்சாலைகள்,இரவு வாழ்க்கை ,கால்வாய் படகுப் பயணங்கள் மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் சங்கர் மற்றும் கல்லூரித்தோழி Shahnaz இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு ஆதலால் இப் பயணம் சுவாரசியம் செறிந்ததாக மாறியது.
26-09-09, காலை 06-06 க்கு குளிருக்கு மத்தியில் துவங்கிய என் பயணம், மிதமான வெயிலுக்கு நடுவில் அன்று காலை 11-30 மணியளவில் முடிந்தது. இடையில் மாற்றப்பட்ட பயணவழி காரணமாக 30 நிமிடத் தாமதம் .இதன் காரணமாக இரயில் நிலையத்தில் நண்பன் சங்கரை தவற விட்டுவிட்டேன் (கைப்பேசியின் தவிர்க்கமுடியாத பயன்பாடு அன்று நன்கு புரிந்தது). ஆனால் முன்பே பேசி வைத்திருந்தபடி மதியம் 2.00 மணியளவில் மீண்டும் ஹோட்டலில் சந்தித்துக்கொண்டோம்.
எனது பயண நோக்கமே Amsterdam இன் சுவாரசியம் செறிந்த வரலாறு மற்றும் கலைவாழ்வு பற்றி தெரிந்து கொள்வதற்காக இருந்ததால், என் முதல் இலக்கு, Rembrandt House. 17 ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த Rembrandt, Dutch Golden Age ன் மிக முக்கிய ஓவியர். இவரது The three trees என்கிற கோட்டு ஓவியம் மிகப் பிரபலம். Rambrandt வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றி அமைத்திருக்கிருகிறார்கள். அவரது அரிய கலைசேமிப்புகள் மற்றும் அவரது படைப்புகள், போக அவரது etching technique, Iconography பற்றிய செயல்முறை விளக்கங்கள் மிகவும் நன்றாக இருந்தது.
அடுத்ததாக நான் சென்றது Von Gogh Museum.இங்கு Von Gogh ன் படைப்புகள் மூன்று தளங்களில் வருட வாரியாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். Post-Impressionism என்கிற கலைப் பிரிவில் இவரது படைப்புகள் பார்க்கப்படுகின்றன. அவரது இறுதிக்கால ஓவியங்கள் தவிர்த்து மற்றவை பெரிதாக ரசிக்கப்படுவதாக தெரியவில்லை. அவரது பெருமைக்கு காரணம் படைப்புகளின் தரம் அல்ல ,அவரது இலக்கணம் மீறிய புதிய பரிமாணம் என்பது நன்கு புரிந்தது. இவரது படைப்புகளை நானும் சங்கரும் ஒருசில புரிதலுடன் பார்த்தோம்.பின்பு இருவரும் அங்கிருந்து Shahnaz வீட்டிற்குச் சென்றோம்.
கல்லூரிப் பெண்ணாகப் பார்த்த Shahnazன் குடும்பப் பாங்கு, நேர்த்தியாக பாராமரிக்கப்படும் அவர்களது அழகான வீட்டில், அவளது கணவனின் அன்பான உபசரிப்பில்,குழந்தை Bilalin அழகான மழலையில் தெரிந்தது. நண்பர்கள், குடும்பம் மற்றும் பொதுவான அளவலாவலுக்குப் பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகான ருசியான உணவுடன் அங்கிருந்து விடை பெற்றோம்.
என் அடுத்த இலக்கு Amsterdam இன் கால்வாய் படகுப் பயணம்.Amsterdam இன் முக்கிய அம்சம் கால்வாய் படகுப் பயணங்கள்.சாலைகளின் வழியே Amsterdamஐ பார்ப்பதும் கால்வாய் வழியே Amsterdam ஐ பார்ப்பதும் இரு வேறு அனுபவங்கள். அதுவும் கால்வாய் வழியே இரவில் நாம் பார்க்கும் Amsterdam அவ்வளவு அழகு.
மிகக் குறுகலான கால்வாய்கள் வழியே, நீர் மட்டத்தில் இருந்து 12 அடி முதல் 15 அடி உயரமே உள்ள 17 ம் நூற்றாண்டின் பாலங்களின் ஊடே பயணம் செய்யும் அனுபவம் மிக அருமை.அதுவும் மிக குறுகலான கால்வாய்களில் படகோட்டி 90 பாகை ஓடிவுகளில் படகை ஆநாயசமாகத் திருப்புவது பயங்கர ஆச்சர்ய அனுபவம்.
இந்தக் கால்வாய்கள் 17 ம் நூற்றாண்டில் Amsterdamல் மக்கள் குடியேற்றத்திற்காக அமைக்கப்பட்டவை.முழுமையடையாத concentric circle வடிவில் அமைக்கப்பட்ட இக்கால்வாய்களில் மூன்று வட்டங்கள் குடியேற்றத்திற்காகவும் நான்காவது நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புக்காகவும் அமைக்கப்பட்டவை. இந்த கால்வாய்கள் பொதுவாக Grachtengordel என அழைக்கப்படுகின்றன. இக்கால்வாய்களில் பல படகு வீடுகளைப் பார்க்கலாம் . Italian Job போன்ற படங்களில் பார்த்ததைப் போன்ற ஒரு சில ஆடம்பர மதகு வீடுகளை யும் பார்க்கலாம்.
கால்வாய் பயணத்தின் ஊடே Amsterdam ன் மிகச் சிறிய வீடு, சாயும் வீடுகள்,13 ம் நூற்றாண்டின் மிகப் பழைய தேவாலயம்,Anne Frank House, புராதன நாவாய்ப் படகு, “Red light district” ,பாலங்களின் ஒளி அலங்காரம், இவற்றை வழிகாட்டியின் விளக்கத்துடன் பார்த்து மகிழலாம். கூடவே கையில் Amsterdamன் Heineken beerம் இருந்து விட்டால் Amsterdam - மண்ணில் இறங்கி வந்த சொர்க்கம்தான்.
Red light district - Amsterdam என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இதுதான். வருடத்தின் ஓவ்வொரு மாலையும் மிகவும் ஆரவாரத்துடன் காணப்படும் இடம் இது.Amsterdam Central ன் அருகே உள்ள Leidseplein மற்றும் Rembrandtplein போன்ற இடங்கள் இரவு வாழ்க்கைக்கு முக்கியமானவை. இந்த இடங்கள் தான் பொதுவாக Red light district என அழைக்கப்படுகின்றன.
அந்தப் பகுதி முழுக்க குறுகலான சாலைகளின் ஊடே விரவிக் கிடக்கும் Glass houses,Sex shops,Dance bars மற்றும் ethnic restaurantகள் தவிர சுவாரசியமான வேறு பல விசயங்களையும் இங்கு காணலாம். முக்கியமாக இங்கு எந்தவொரு Café யிலும் நம்ம ஊர் கஞ்சா (Hash Browny) கிடைக்கும். Amsterdam ல் இது சட்டப்பூர்வம். புகைமூட்டத்துடன் காணப்படும் இந்த Cafe களுக்குள் சென்று வந்தாலே நமக்கு போதை ஏறலாம். முன் பின் இரவுகளில் முழுக்க கும்பலுடன் காணப்படும் Beer gardenகள் ,மங்கல் பார்வையுடன் நம்மை கடந்து செல்லும் மக்கள், கள் வடியும் பார்வையுடன் வலை விரிக்கும் விலை மாதுகள்..இரவு முழுக்க நிரம்பி வழியும் restaurant கள் dance barகள் என முற்றிலும் புது உலகம் இது. பயணக் களைப்பு காரணமாக இரவு 1.30 மணியளவில் இங்கிருந்து அறைக்குத் திரும்பினேன்.ஆனால் அதிகாலை 5 மணி வரை இங்கு ஆரவாரம் அடங்காதாம்
அடுத்த நாள் காலை Vondal park இல் சிறிது நேரம் உலாவி விட்டு Rijks அருங்காட்சி சாலைக்குச் சென்றேன்.இங்கு பல்லாயிரக்கணக்கான கலைப் பொருட்களை (Dutch art) பார்வைக்கு வைத்துள்ளார்கள். ஓவியப்பிரிவில் Rembrandt மற்றும் அவருடைய மாணாக்கர்களின் ஓவியங்களை பார்வைக்கு வைத்துள்ளார்கள். இங்கு இந்தியாவுடன் Dutch வைத்திருந்த வாணிபத் தொடர்பை விளக்கும் வண்ணம் இடம் பெற்றிருந்த ,மிகப்பெரிய ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது.
அடுத்ததாக நான் சென்றது Anne Frank House. இது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாஜிக் கொடுமைக்குப் பயந்து தன் குடும்பம் மற்றும் குடும்ப நண்பர்கள் உடன் இரண்டு வருடங்கள் மறைவிடத்தில்( Secret Annexe) வாழ்ந்து பயங்கரவாத முகாமில் (concentration camp) உயிரை விட்ட Anne Frank என்ற யூதப் பதின்பருவப் பெண் வாழ்ந்த வீடு. மறைவிடத்தில் வாழ்ந்த சமயத்தில் அவள் எழுதிய நாட் குறிப்புகள் நவீன உலகின் போருக்கு எதிரான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.13-14 வயதே ஆன பதின்பருவப் பெண்ணின் நாட் குறிப்புகளில் காணப்படும் விசாலமான பார்வை, பல புத்தகங்களை வாசித்துச் சேர்த்த அறிவின் முதிர்ச்சி உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். எல்லாவற்றையும் விட அவள் எழுத்தின் நேர்மை நிச்சயம் நம்மை வெட்கப்பட வைக்கும்.
“The diary of a young girl” என்ற அந்த நாட் குறிப்புகளின் புத்தகவடிவத்தை நீங்கள் படித்திருந்தால் இந்த வீட்டின் ஒவ்வொரு அறையும் உங்களுக்கு ஓராயிரம் கதை சொல்லும். ஒவ்வொரு அறையிலும் இது சம்பந்தப்பட்ட ஒரு சிலரின் பேட்டியுடன் ஒளி பரப்பப்படும் குறும்படங்கள் மிகக் கூர்மையானவை. முக்கியமாக Anne Frank ன் தந்தை Otto frank ன் பேட்டி.
இங்கு வந்து செல்லும் அனைவரின் கண்களும் விழி நீரால் திரை இடத் தயங்குவது இல்லை. சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் இந்த உலகுக்கு போருக்குப் எதிராக அனுப்பப்படும் ஓராயிரம் செய்திகளாக எனக்குத் தோன்றியது. மேற்சொன்ன கருத்தின் ஆங்கில வரி வடிவத்தை அங்கிருந்த குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்துவிட்டு கனத்த மனத்துடன் அங்கிருந்து அகன்றேன்
இவைபோக Amsterdam Centralன் அருகிலேயே National Monument, Royal palace மற்றும் Madame tussaud museum போன்ற இடங்களை பார்க்கலாம். மேலும் வைரம் குறித்த விபரங்களில் நமக்கு ஆர்வம் இருந்தால் Amsterdamல் Haasan போன்ற வைர விற்பன்னர்களின் தொழிற்சாலையில் வைரம் (Number of faces,cutting angle,cutting technique,Grade,cost,etc..) குறித்த பல விபரங்களை நேரடியாக செயல்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்.
Amsterdamன் பல வேறுபட்ட பழக்க வழக்கங்களுக்கு/மக்களுக்கு மத்தியில் நான் இங்கு ஒரு சில பொதுவான அம்சங்களையும் பார்த்தேன். அவற்றில் ஒன்று Amsterdamன் எல்லா வீடுகளின் முகப்பு உச்சியிலும் காணப்படும் ,வீட்டுப் பொருட்களை மேலேற்ற உபயோகப்படுத்தும் ஒரு சட்டம். வீடுகளின் குறுகலான படிகளில் வழியே உள்ளே கொண்டு செல்லமுடியாத பொருட்களை இதன் மேலும் மேலேற்றி சன்னல் கதவுகள் மூலமாக உள்ளே எடுப்பதற்காக இந்த அமைப்பு.13 ம் நூற்றாண்டின் பழைய வீடுகள் துவங்கி இன்றை வீடுகள் வரை இந்த ஒற்றுமையைப் பார்க்கலாம்.
அடுத்த பொதுவான அம்சம் மிதிவண்டிகள். எங்கு பார்த்தாலும் மிதிவண்டிகள் மற்றும் மிதிவண்டிகள்தான். இதற்கு Amsterdam central முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான மூன்றடுக்கு மிதிவண்டி நிறுத்துமிடமே சாட்சி. இரு தினங்களே Amsterdamல் சுற்ற முடிந்தாலும் ஏற்கனவே தெரிவு செய்து வைத்திருந்த அனைத்து இடங்களையும் பார்த்த திருப்தியுடன் Bremen திரும்பினேன்.
Amsterdam பயணத்திற்கு ஒருசில உபயோகமான குறிப்புகளோடு இப்பயணக் குறிப்பை !! நிறைவு செய்கிறேன்.
1.வருடத்தின் எந்த ஒரு நாளும் நிச்சயமற்ற வானிலை நிலவக்கூடிய இடம் இது. 60 சதவிகிதத்திற்கும் அதிகமான நாட்கள் மழை பொழியக் கூடும் ஆகவே தேவையான முன்னேற்பாடுகளோடு போவது நலம்.(அதிசயமாக என் இருதினப் பயணத்தில் நல்ல வானிலை இருந்தது.)
2. உங்கள் பயண நோக்கம், ஓரிரு நாட்கள் நகரின் முக்கிய இடங்களைப் (Museums,parks,canal cruise and red light district) பார்ப்பதாக மட்டுமே இருந்தால் I Amsterdam card வாங்கி முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை நாம் பல Museum களில் நுழைவுச்சீட்டாகவும் , உள்ளூர் போக்குவரத்து வசதிக்காகவும், பயன்படுத்திக் கொள்ளலாம்.